A Monthly Newsmagazine from Institute of Contemporary Islamic Thought (ICIT)
To Gain access to thousands of articles, khutbas, conferences, books (including tafsirs) & to participate in life enhancing events

None

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றல்: யாருடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில்? –பாகம் 1 Acquiring political power: on whose terms and conditions? (Part I) (Tamil)

Perwez Shafi

(தற்போது ஏற்பட்டுவரும்) முஸ்லிம் மறுமலர்ச்சி மற்றும் மாற்றங்கள் தொடர்பாக தர்க்கபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் எளிதில் விளக்க முடியாத பல அம்சங்கள் இருக்கின்றன. இந்த மறுமலர்ச்சிகளையும் மாற்றங்களையும் அவதானிக்கையில், சில சங்கடமான கேள்விகள் எழுகின்றன:

1. முஸ்லிம் நாடுகளில் (குடிமை அல்லது இராணுவப் பின்னணி கொண்ட) சில குறிப்பிட்ட தனிநபர்களோ குடும்பங்களோ இப்படியொரு நீண்டநெடுங்காலம் ஆட்சிசெய்ய முடிவது எப்படி? அதிகாரத்தில் இருப்பவர்களாயினும் அவர்களை எதிர்ப்பவர்களாயினும் வன்முறை மற்றும் பலாத்காரத்தையே சார்ந்திருப்பது ஏன்?

2. பிரபுத்துவ அல்லது சர்வாதிகார ஆட்சிமுறைகளுக்குள் அவற்றை விழச்செய்யும் பிரத்யேகமான எதுவும் அவற்றின் வரலாற்றுப் பரிணாமத்திலேயே இருக்கின்றதா?

3. முஸ்லிம் உலகில் மறுமலர்ச்சி மற்றும் இஸ்லாமிய மாற்றங்களை முன்மொழிபவர்களை அமெரிக்க ஐக்கிய நாடுகளும் மேற்குலகும் ஆதரிப்பது ஏன்?

4. மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நாடுகளில், மேற்குலகுடனும் அதன் பெருவர்த்தக நிறுவனங்களுடனும் ‘எப்போதும் போல சுமுகமானதொரு’ உறவு நிலவுவது ஏன்?

5. ஒரு மூச்சில் முஸ்லிம்களைத் தனது நண்பர்கள் என்றும், அடுத்ததிலேயே அவர்களைப் பயங்கரவாதிகள் என்றும் ஏகசமயத்தில் தனது நலன்களுக்கேற்ப மாற்றிமாற்றிப் பிரகடனம் செய்யும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் மேற்குலகின் பொறிக்குள் முஸ்லிம்கள் தொடர்ந்து விழுவதற்குக் காரணமென்ன?

6. இந்த மறுமலர்ச்சிகள் மற்றும் மாற்றங்களுக்கான மேற்கத்திய எதிர்வினை சுன்னி உலகில் மட்டும் மற்றதை ஒப்பிடுகையில் வித்தியாசமாக இருப்பது ஏன்? மறுபுறம் பார்க்கின், முஸ்லிம்களின் எதிர்வினையும் பொதுவாக மேற்குலகுடையதை ஒத்ததாகவே இருப்பது ஏன்?

7. இந்தப் புரட்சியாளர்கள் தமது சமூகங்களின் மீதான மேற்குலகின் மேலாதிக்கத்தையோ, மேற்குலக மதிப்பீடுகளையோ, முதலாளித்துவப் பொருளாதார மாதிரியையோ சவாலுக்குள்ளாக்காதது ஏன்?

8. முஸ்லிம்களிடம் தமது இலக்குகள் பற்றியும், அவற்றை அடைவதற்கான வழிமுறைகள் பற்றியும் ஓர் புலமைத்துவத் தெளிவு இருக்கின்றதா? வேறு வார்த்தைகளில் கேட்பதாயின் மறுமலர்ச்சியைத் துவக்கி, உருவாக்கி, அணிதிரட்டி, ஒழுங்குபடுத்துவதற்கும் முத்தகீ தலைமைத்துவத்தால் வழிநடத்தப்படுவதற்கும், அதன் மூலம் இஸ்லாமிய நோக்குடன் இயைந்த வகையிலான வழிமுறைகளின் ஊடாக இலக்குகளையும் குறிக்கோள்களையும் அடைவதற்கும் திறன்படைத்தாக அவர்களின் புலமைத்துவ உலகநோக்கு இருக்கின்றதா?

9. இறுதியாக, யாருடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில் இந்த அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படுகிறது?

இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் ஓர் உலகநோக்கினுள், அதிலும் குறிப்பாக முழு இஸ்லாமிய வரலாற்றையும் தழுவியதாக அமைந்த ஓர் அரசியல் சிந்தனையிலேயே தங்கியிருக்கின்றன. முஸ்லிம்கள் தமது இலக்குகள் பற்றியும் அவற்றை அடைவதற்கான வழிமுறைகள் பற்றியும் ஒத்திசைவு நிறைந்த, முரண்பாடுகளை விட்டுத் தூய்மையான தமது உலகநோக்கு பற்றிய ஓர் புலமைத்துவத் தெளிவைப் பெற்றிருப்பார்களாயின், மேற்கூறிய அனைத்துக் கேள்விகளுக்கும் ஒருவரால் எளிதில் விடையளிக்க முடியும். எனினும், நிலைமை அவ்வாறு இல்லை. இந்தத் தெளிவின்மையானது ஓர் கருத்தியல் குழப்பத்தை வெளிக்காட்டுகிறது. அது முஸ்லிம்களைத் தமது உண்மை எதிரிகளை இனங்காணுவதிலிருந்து தடுத்துக்கொண்டும், அவர்கள் தமது ஒவ்வொரு அடியிலும் சமரசம் செய்துகொண்டாகவேண்டுமென நிர்பந்தித்துக்கொண்டும் இருக்கிறது. ’அர்த்தமிகு மாற்றம் எதுவும் மேற்குலகின் சம்மதமின்றி நிகழுவது சாத்தியமில்லை என்பது தான் உண்மை’ என்பதாக அது அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, உலகநோக்கில் தெளிவற்றிருக்கும் இத்தகையவொரு சூழ்நிலையை துனீஷியா, லிபியா, ஏமன், எகிப்து மற்றும் வளைகுடா ஷெய்க்டோம்களிலும், இப்போது சிரியாவிலும் அவதானிக்க முடிகிறது.

முஸ்லிம் அரசியல் சிந்தனை குறித்து, குறிப்பாக சுன்னி அரசியல் சிந்தனை குறித்து ஓர் அனைத்தளாவிய, முறைப்பாங்கான அணுகுமுறையை மேற்கொள்ளும்போது பிரச்சினை எங்கிருக்கிறது என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடிகிறது. இந்த எழுத்தாளரும் கிரசண்ட் இன்டர்நேஷனல் பத்திரிக்கையும் உட்பிரிவுவாதக் கருத்தாக்கங்களிலிருந்து எப்போதும் விலகியே இருந்துவந்திருக்கின்றனர். எனினும், பிரச்சினை ஒரு குறிப்பிட்ட உட்பிரிவின் கருத்தியலில் இருக்கிறதெனும்போது வெறுமனே அதனை அலட்சியப்படுத்துவதோ கண்டனம்செய்வதோ மட்டும் போதுமானதாக மாட்டாது. அந்தக் குறிப்பிட்ட உட்பிரிவின் கருத்தியலில் உள்ள பிரச்சினையை அதன் வேரிலேயே இனம்காணும் வரை முஸ்லிம் ஒற்றுமைக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் வெற்றிகரமாக அமையாது. இந்த அரசியல் குழப்பத்திற்கும் சிந்தனை மற்றும் செயலில் தோன்றும் முரண்பாடுகளுக்கும் தோற்றமூலமாகவுள்ள சுன்னி அரசியல் சிந்தனை பற்றி மறுபரிசீலனை செய்வதற்கு ஒரு தார்மீகத் துணிவும் புலமைத்துவ நேர்மையும் விழிப்புணர்வும் தேவைப்படுகிறது. ஏனெனில், முஸ்லிம் உலகிலுள்ள பெருந்தொகையினர் ஏற்றுப் பின்பற்றும் ஒன்றாக அது இருக்கிறது. எனவே, புரட்சியாளர்கள் மத்தியிலும் கூட அது தொடுவதற்குத் தடைசெய்யப்பட்டவொரு கருப்பொருளாகவே இருக்கிறது.

முதற் கட்டம்:

இஸ்லாத்தின் திசைநெறியில் மாற்றம், வீழ்ச்சி மற்றும் சிதைவு

இரண்டு கட்டங்களாகப் பகுக்கத்தக்க சுன்னி அரசியல் சிந்தனையின் வரலாற்றுப் பரிணாமத்திலிருந்தே மேற்கண்ட தீர்மானம் வருவிக்கப்பட்டுள்ளது. பதினேழாம் நூற்றாண்டு வாக்கில் முஸ்லிம் உலகினுள் நுழைந்து மேலாதிக்கம் செலுத்தவாரம்பித்த மேற்கத்தியக் காலனித்துவம் வரையான முதற் கட்டத்தில், சுன்னி அரசியல் சிந்தனையும் உலகநோக்கும் கோத்திரவாதம், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போட்டி-பொறாமை, எதேச்சதிகாரம் ஆகியவற்றில் சிக்குண்டு கிடந்தது. இந்தத் தீமைகளைக் களைந்தெறிவதற்குத் திறன்படைத்த இஸ்லாத்தின் பரிசுத்தக் கோட்பாடுகள் அமலாக்கம்பெறுவதற்கான வாய்ப்பு துவக்கத்திலிருந்தே ஒருபோதும் வழங்கப்படவில்லை.

நமது அன்பிற்கினிய இறைத்தூதரின் (ஸல்) மரணத்தையடுத்து இஸ்லாத்தின் திசைநெறியில் மாற்றம் ஏற்படலானது. இறைத்தூதருக்கும் அவரின் தோழர்களுக்கும் எதிராகத் தொடுக்கப்பட்ட பல்வேறு போர்களில் முஷ்ரிக் தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டுவிட்டனர். எனினும், மக்கா வெற்றி வரை பிழைத்திருந்த அபூ சுஃப்யானும் அவரது குடும்பமும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு வேண்டாவெறுப்பாக முஸ்லிம்களாக மாறினர். முஸ்லிம்களாக மாறிவிட்ட தமது எதிரிகள் விடயத்தில் இறைத்தூதரின் போக்கு எப்போதுமே உளப்பூர்வமானதாகவும் பரிவுநிறைந்ததாகவுமே இருந்தது. ஆனால், அபூ சுஃப்யானின் விடயத்திலோ அவரது தீவிர இஸ்லாமிய எதிர்ப்பின் காரணமாக, அவர் தென்படும் போதெல்லாம் இறைத்தூதரவர்கள் தமது முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள்; அவருடன் நெருக்கமான உறவைப் பேணவுமில்லை. இறைத்தூதரவர்கள் (ஸல்) இறைவனடி சேர்ந்த பிறகு, அபூ சுஃப்யானின் குடும்பத்தினரும் பிள்ளைகளும் இரத்தபந்தச் சலுகையின் ஊடாக இஸ்லாமிய அரசில் முக்கியப் பதவிகளைப் பெற்றுக் கொண்டதுடன், புதிதாகப் பெற்ற இந்த அதிகாரத்தை நன்கு வலுப்படுத்திக்கொள்ளவும் ஆரம்பித்தனர். ஆக, அபூ சுஃப்யான் இறைத்தூதருடனான நேரடி மோதலில் எதனை அடைந்துகொள்வதில் தொல்வியுற்றாரோ, அதனை இஸ்லாமிய வலயத்திற்குள் இருந்தவாறே அடைந்துகொண்டார்.

அபூ சுஃப்யானின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அரசியல் மற்றும் இஸ்லாமிய அரச நிருவாகம் தொடர்பான முக்கிய இஸ்லாமியப் போதனைகளைத் திரிக்கவாரம்பித்தனர். அவர்கள் தமது அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்வதற்கும், ஏதோவொரு வகையில் சட்டப்பூர்வத் தன்மையைப் பெறுவதற்கும் இது அவர்களுக்கு வகைசெய்தது. சூது, உட்சதி, வெளிப்படைப் போர் ஆகியவற்றினூடாக முஆவியா இஸ்லாமிய அரசின் முழுமுதல் ஆட்சியாளராக மாறினார். அவர் இறைத்தூதரின் தோழமையை ஒரேயொரு நாள் கூடப் பெற்றிராத நிலையிலும், ‘வேதவெளிப்பாட்டை எழுத்தில் பதிபவர்’ என்பதானவொரு பட்டத்தைத் தமக்கு வழங்கிக் கொண்டார். மக்கா வெற்றியை அடுத்து ஓராண்டிலேயே இறுதி வஹி இஸ்லாத்தின் செய்தியை நிறைவுசெய்துவிட்டது; அதைத் தொடர்ந்து இறைத்தூதரின் மரணமும் நிகழ்ந்தது (என்பதை இங்கு கருத்தில் கொள்ளவேண்டும்). அபூ சுஃப்யான் இஸ்லாத்தின் போதனைகளை உருத்திரிப்பதன் மூலம் இரண்டு குறிக்கோள்களை அடைய நாட்டம் கொண்டிருந்தார்: (1) போலி ஹதீஸ்களைப் புனைந்துருவாக்குவதன் மூலமும் அசல் ஹதீஸ்களை இருட்டடிப்புச் செய்வதன் மூலமும் தனக்கொரு சட்டப்பூர்வத் தன்மையை ஏற்படுத்திக் கொள்வது. தனக்கும் தனது சகாக்களுக்கும் “ரழியல்லாஹு அன்ஹு” என்ற இஸ்லாமிய அடைமொழிகளை வழங்கிக் கொள்வது. தன்னுடைய நோக்கத்திற்குப் பொருந்தும் வகையில் முக்கியக் குர்ஆனிய வசனங்களின் அர்த்தத்தை மாற்றுவது. (2) இறைத்தூதருக்கு நெருங்கிய பல தோழர்கள் மற்றும் குடும்பத்தினர் நியாயமாகவும் சட்டப்பூர்வமாகவும் பெற்றிருக்கவேண்டிய பதவி பொறுப்புகளை விட்டு அவர்களைத் தடுப்பது. அது மட்டுமின்றி, அவரை எதிர்த்தவர்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். இவ்வாறு சட்டவிரோதத் தன்மையும், தமது சட்டவிரோதத் தன்மைக்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு வாதத்தையும் முறியடிப்பதற்கு பலாத்காரத்தின் மீது இயல்பாகவே சார்பு கொள்ளுவதும் அந்த நாள்தொட்டே சுன்னி அரசியல் சிந்தனையின் இன்றியமையாதவொரு அம்சமாக இருந்துவரலாயிற்று. இந்தத் திரிபுகள் மற்றும் வழிகேடுகளை அம்பலப்படுத்தி உண்மை இஸ்லாமியப் போதனைகளைப் பிரச்சாரம் செய்வதற்கான உரிமையை இறைத்தூதரின் மிக நெருங்கிய சஹாபாக்கள் பெரும்பாலானோரிடமிருந்து பறித்தது மட்டுமின்றி, அவர்கள் அதில் பிடிவாதமாக இருந்தபோது ஒன்று அவர்கள் தொலைதூரப் பிரதேசங்களுக்கு நாடுகடத்தப்பட்டனர், அல்லது சிறையிலடைக்கப்பட்டனர், அல்லது விஷமூட்டப்பட்டனர். இவ்வாறு செய்ததன் மூலம் அதிகாரப் பசி கொண்ட அபூ சுஃப்யானின் கோத்திரம் தனது சொந்த ஏகாதிபத்தியப் பார்வையைப் பிரச்சாரம் செய்வதற்கான களம் அகலத் திறந்துவிடப்பட்டது.

இஸ்லாமிய அரசுக்குப் பதிலாக பரம்பரை ஆட்சிமுறையே அரசியல் கட்டமைப்பு மற்றும் சித்தாந்தத்தைத் தீர்மானிக்கும் காரணியாக மாறியது. அரசியல் மற்றும் அரச நிருவாகம் தொடர்பான விவகாரங்கள் மிகவும் கண்டிப்பான முறையில் பொதுமக்களின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டவையாக மாறியபோது, அவர்கள் சமயச் சடங்குகளை மாத்திரம் நிறைவேற்றுபவர்களாகச் சுருக்கப்பட்டார்கள். கிளர்ச்சியூட்டும் விடுதலை உணர்ச்சியோ உணர்வோ கொஞ்சமும் அற்ற வகையில் சடங்குகள் மீதான அதீத வலியுறுத்தல் தான் நியமம் என்றாகி இன்று வரை அது அவ்வாறே தொடர்ந்து வருகிறது. அரசியல் அதிகாரத்தைப் பெறுவது தொடர்பாகவும், அதனைத் தக்கவைத்துப் பேணுவது தொடர்பாகவுமுள்ள இஸ்லாமிய விதிமுறைகள் ஒருபோதும் காலூன்ற அனுமதிக்கப்படவில்லை. கோத்திரவாதத்தின் தீமைகள், பரஸ்பரப் பொறாமை, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வேட்கை, துன்புறுத்தல்கள், சர்வாதிகாரம் ஆகியவை சுன்னி அரசியல் எண்ணக்கருக்கள், கட்டமைப்பு, நடைமுறை ஆகியவற்றில் உள்ளடங்கியவையாக மாறின. இதன் விளைவாக, பனூ உமையா மற்றும் பனூ அப்பாஸ் மன்னர் பரம்பரைகளின் அடிப்படையிலமைந்த சுன்னி அரசியல் அமைப்பு எக்காலத்திலும் சட்டப்பூர்வமானதாக மாற முடியவில்லை. எனினும், அவர்கள் இந்தச் செயல்முறையில் அதிமுக்கிய வெளிகளுக்கான இஸ்லாத்தின் உண்மைச் சமத்துவப் போதனைகளை நிரந்தரமாக இருட்டடிப்புச் செய்துவிட்டனர். இஸ்லாத்தில் அரசியல் என்பதன் வரைவிலக்கணம் என்னவென்றால், குர்ஆன் மற்றும் சுன்னாஹ் அறிவுறுத்தியுள்ள சட்டபூர்வமான முறையில் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதாகும். (அது தக்வாவின் அடிப்படையில் வெகுமக்கள் ஒருவரைப் பொறுப்புக்குத் தெரிவுசெய்வதாகும்; மாறாக, ஒருவர் தன்னை தானே முன்மொழிந்து அல்லது தன்னை அத்துமீறித் திணித்து பலாத்காரம் அல்லது வஞ்சனையைக் கொண்டு அதிகாரத்தைப் பெறுவதல்ல. ) அதிகாரம் செலுத்துதல் எனபது மனிதகுலத்துக்குச் சேவைசெய்யும் பொருட்டு ஒரு கூட்டு முடிவெடுக்கும் சட்டகத்தின் ஊடாகச் சமூகநீதியை நிலைநிறுத்துவதுடன் தொடர்புடையதாகும். எனவே, சட்டவிரோதமான அல்லது முறைகேடானதொரு வழியில் அதிகாரத்தைப் பெறுவதும், வரைமுறையற்றுப் பொருளாதார வளங்களைச் செலவிடுவதும் கண்டிப்பான முறையில் தடுக்கப்பட்டதாகும். சுருங்கக் கூறுவதாயின், இஸ்லாம் என்பது சடங்குகளாகச் சுருக்கப்பட்டு, தனிமனித அளவில் மட்டும் நடைமுறைப்படுத்தப்படும் ஒன்றாக ஆக்கப்பட்டது. இந்த ஆரோக்கியமற்ற, சட்டவிரோத மாற்றங்கள் இஸ்லாத்தின் திசைநெறியை நிரந்தமாக மாற்றியதுடன், அதன் அனைத்தளாவிய சமத்துவ உணர்வும் ஊதிஅணைக்கப்பட்டது.

இந்தச் சட்டவிரோதத் தன்மை வெகுமக்களின் நலன்கள், விதிமுறைகள், மதிப்பீடுகள், நம்பிக்கைக் கோவை ஆகியவற்றை அதிகார வெறிபிடித்த மேட்டுக்குடிகளுடையவற்றிலிருந்து வேறுபட்டவையாக ஆக்கியது. உதாரணமாக, எந்தவொரு சுன்னி சமூகத்திலும் இராணுவப் பயிற்சி என்பது ஒரு அங்கமாக இருக்கவில்லை. மேட்டுக்குடிகளின் சட்டவிரோதத் தன்மை வெகுமக்களை நம்பாதவர்களாக அவர்களை ஆக்கியிருந்தது தான் இதற்கு மிகச்சரியான காரணம். இவ்வாறாகவே சட்டவிரோதத் தன்மை, கொடுங்கோன்மை, சர்வாதிகாரம் ஆகியவை சுன்னி அரசியல் சிந்தனை மற்றும் கட்டமைப்புகளின் அடையாள முத்திரைகளாக மாறின. இதன் விளைவாக, கொடுங்கோன்மை மற்றும் பலாத்காரத்தின் துணையோடு நிலைநிறுத்தப்படும் ஒரு புதிய ஏகாதிபத்திய வகை மதத்தை இஸ்லாத்தின் பெயரால் பரப்புவது நியமமாகிவிட்டது. இந்த வகையில், இஸ்லாம் என்பது ஒரு ‘மதமாகச்’ சுருக்கப்பட்டது. அதில் உணர்வேதுமற்ற வழிபட்டுக் கிரியைகள் முதன்மை முக்கியத்துவம் பெற்றவையாக மாற்றப்பட்ட அதேவேளை, ஒட்டுமொத்த இஸ்லாமிய அமைப்புமுறையுடன் அவற்றுக்கிருக்கும் ஒட்டுறவு முற்றாகத் துண்டிக்கப்பட்டது. சட்டத்தின் ஆட்சி, சமூகநீதி போன்ற மதிப்பீடுகள் ஆரம்ப நாட்களிலேயே கைவிடப்பட்டுவிட்டன. ஒடுக்குமுறைச் சகதியில் சிக்குண்ட இந்த வகை இஸ்லாத்தை முஸ்லிம்கள் இன்றுவரை எவ்விதமான சிந்தனையோ மீளாய்வோ இன்றி பின்பற்றி வருவது தான் அவர்கள் நண்பனையும் எதிரியையும் பிரித்தறிய இயலாதவர்களாகவும்; முஸ்லிம் சமூகத்தின் நியாயபூர்வமான, இறையுணர்வு மிக்க, சட்டபூர்வ தலைவர்களை அதிகாரப் பசி கொண்ட சந்தர்ப்பவாதிகளைவிட்டுத் தனியே பிரித்தறிய இயலாதவர்களாகவும்; வெகுமக்களின் நலனுக்காக, சட்டபூர்வமான முறையில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி அமலாக்குவது எவ்வாறு என்பதைப் புரிந்துகொள்ளாதவர்களாகவும் இருப்பதற்கு அடிப்படைக் காரணம். உலமா மற்றும் அறிஞர்களும் அவர்களை ஆதரித்த முஸ்லிம் வெகுமக்களும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதன் மூலம் புலமைத்துவத் தேடலின் கதவும், உருவாகி சில காலமே ஆகியிருந்த இஸ்லாமியச் சமூகத்தை வழிநடத்துவதற்கான இறையுணர்வு மிக்க சட்டபூர்வ இமாம்களின் உரிமையும், இஜ்திஹாதின் கதவும் படிப்படியாக மூடப்பட்டன. இதற்காக, முஸ்லிம்களின் படைப்பூக்கத்திறன் அரசியல் அல்லாத, இறையியல் அல்லாத வெளிகளான கலை, கட்டடக் கலை, போர்த்திற நுட்பங்கள் மற்றும் கருவிகளின் மேம்பாடு, அறிவியல் கற்கை மற்றும் ஆய்வு முறைமைகளின் பெருக்கம், பகுத்தறிவுவாதம் தொடர்பான கிரேக்க ரோம கருத்தாக்கங்களைக் கற்றல் போன்றவற்றின் பக்கம் மடைமாற்றி விடப்பட்டது. இந்த புலமைத்துவ முன்னேற்றங்கள் அனைத்துக்கும் காரணம் இஸ்லாம் தானே தவிர சுன்னி அரசியல் கட்டமைப்புகள் மற்றும் அமைப்புமுறைகளோ; அல்லது, பரம்பரை முறை சர்வாதிகாரத்தால் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்ட சுன்னி அரசாங்கங்களின் வழிகாட்டலோ நிதியுதவியோ ஆர்வமூட்டலோ அல்ல என்பதை இங்கு உறுதியாக மனதில் இருத்தவேண்டும்.

மேற்கூறியதற்கு ஆதரவான சான்றாக முன்வைப்பதற்கு துவக்ககால முஸ்லிம் வரலாற்றின் நம்பிக்கைக் கோட்பாட்டுச் சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்தாக வேண்டுமென்கிற அவசியமில்லை. மாறாக, முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களால் பதிவுசெய்யப்பட்டுள்ள முஸ்லிம் நாகரிகத்தின் வீழ்ச்சி மற்றும் சிதைவே கூட தன்னளவில் இந்தச் சட்டவிரோதத் தன்மை மற்றும் சர்வாதிகாரத்துக்கு எதிரானவொரு அனுபவபூர்வ சான்றாக விளங்குகிறது. ஒருவர் இந்த வரலாற்று உண்மைகளுடன் உடன்பட்டு அவற்றை ஏற்றுக்கொண்டாலும் சரி, அல்லது ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரியே-முஸ்லிம் உலகைப் பொறுத்தவரை அவற்றின் தாக்கம் படுநாசகரமானது. மேற்கத்திய காலனியத்தின் தோற்றத்திற்கு முன்னரே பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துவந்த பிரிவினைகள், உட்சண்டை, வீழ்ச்சி, சிதைவு, பிளவுபடல் ஆகியன அன்னியர் ஆக்கிரமிப்புக்கு வழிகோலின என்பதை எவரும் மறுக்கமுடியாது. உருத்திரிந்து செயலிழந்திருக்கும் சுன்னி அரசியல் சிந்தனைக்கான சான்றினை முதலில் முஸ்லிம் நாகரிகத்தின் வீழ்ச்சி மற்றும் சிதைவில் தேடவேண்டுமென இந்த எழுத்தாளருக்கு அவரின் முனைவர்பட்ட ஆய்வின் போது வழிகாட்டியது மாபெரும் இஸ்லாமிய அரசியல் அறிஞர் டாக்டர் கலீம் சித்தீகி தான். இஸ்லாத்தைக் குறித்த ஆழ்ந்த ஞானமும் சமூகத்தை வழிநடத்துவதற்கான திறனும் படைத்த பெரும்பாலான முத்தகீ இமாம்களும் அறிஞர்களும் மிகக் கொடூரமாக ஒடுக்கப்பட்டார்கள். மற்றவர்கள் சர்வாதிகார நீதிமன்றங்கள் மற்றும் அரசாங்கங்களில் இணையுமாறு விலைகொடுத்து வாங்கப்பட்டனர் அல்லது பலவந்தப்படுத்தப்பட்டனர்; அவர்களுக்குப் கொழுத்த ஊதியமும் சலுகைகளும் வழங்கப்பட்டன. சட்டவிரோத ஆட்சியாளர்களை எதிர்க்கத் துணிந்த வெகு சிலரோ, பிறருக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும் வகையில், விஷமூட்டப்பட்டனர் அல்லது கொலை செய்யப்பட்டனர். வேறு சிலர் நாட்டுப்புறங்களுக்கோ தொலைதூரப் பிரதேசங்களுக்கோ சென்று அமைதியான முறையில் இஸ்லாமிய ஞானத்தைப் பரப்பவும் பிரச்சாரம் செய்யவும் தலைப்பட்டனர். அவர்கள் பற்றியெரிந்து கொண்டிருந்த அரசியல் விவகாரங்களைப் பற்றிப் பேசுவதை தவிர்த்துக்கொண்டு சூஃபியிசத்தை வலியுறுத்தலாயினர். மத்திய ஆசியாவிற்குள்ளும் இந்தோ-பாக் துணைக்கண்டத்திற்குள்ளும் இஸ்லாம் பரவியது இந்த அறிஞர்கள் மற்றும் சூஃபிகள் மூலமாகத் தானேயொழிய சமயம் சாராத மன்னர்கள் மற்றும் படைத் தலைவர்களால் அல்ல. இதற்கு மிக வலுவானதொரு ஆதாரமாக இதைக் கூறலாம்: பிரபலமும் அதிகாரமும் படைத்த மன்னர்கள் மற்றும் படைத்தலைவர்கள் பலரின் அடக்கத்தலங்கள் அனாதரவாக வறண்டு கிடப்பதோடு அவற்றில் தெருநாய்கள் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கும் வேளை, அறிஞர்கள் மற்றும் சூஃபிகளின் அடக்கத்தலங்களிலோ பொதுமக்கள் இலட்சக்கணக்கில் மொய்த்த வண்ணமிருக்கின்றனர்.

எனினும், பொதுவாக இந்த அறிஞர்களும் சூஃபிகளும் அரசியலைக் கைவிட்டதன் மூலம் உள்ளார்ந்து இருகூறாக்கத்தை ஏற்றுக்கொண்டுவிட்டனர்: மன்னர்களும் படைத்தலைவர்களும் ஆட்சியைக் கவனிக்க, இவர்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்வதிலும் துன்புற்றிருந்த வெகுமக்களுக்கு ஆன்மிகத்தின் ஊடாக குணமளிப்பதிலும் தமது கவனத்தைக் குவிக்கலாயினர். அரசியல் நீக்கமடைந்த இந்த உலமா மற்றும் சூஃபிகள் தனிப்பட்டளவில் மனிதகுலத்துக்கு மகத்தான சேவைகள் புரிந்தபோதும், அவர்களால் அரசின் ஒருங்கிணைக்கப்பட்ட அதிகாரம், சாதனங்கள் மற்றும் வளங்களுக்கு எவ்விதத்திலும் இணையாக முடியவில்லை. முத்தகீ தலைவர்கள் இருக்கவே செய்தார்களெனினும் அவர்களால் அரசின் தலைவர்களாகச் செயல்பட முடியவில்லை. துன்புறுத்தல்கள் மற்றும் இருகூறாக்கத்தின் பலனாக, காலவோட்டத்தில் இத்தகைய முத்தகீ தலைவர்களின் தரமும் எண்ணிக்கையும் கூட குறையவாரம்பித்தது. இவ்வாறு வலுவிழந்திருந்த ஓர் இஸ்லாமிய சமூகத்தால் மேம்பட்ட அறிவியல் அறிவையும், சிறந்த அமைப்புரீதியான ஒருங்கிணைப்புத் திறனையும்; சாகசம், பேரார்வம், பேராசை, பிறர் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான நாட்டம் ஆகியவற்றால் நிரம்பிய ஓர் ஊக்கவுணர்வையும் கொண்டிருந்த ஐரோப்பியர்களின் தாக்குதலுக்கு ஒரு வினைத்திறன்மிக்க நடைமுறை எதிர்வினையை ஆற்ற முடியவில்லை.


Sign In


 

Forgot Password ?


 

Not a Member? Sign Up