பலவீனமாகி நொறுங்கிக் கொண்டிருந்த ஒரு கருத்தியலால் சிக்கலுற்றிருந்த முஸ்லிம் உலகின் பழுதடைந்த அரசியல் கட்டமைப்புகளை வாய்ப்பாக்கி, அதன் வளங்களைச் சுரண்டுவதற்காக ஐரோப்பியக் காலனியவாதிகள் பதினேழாம் நூற்றாண்டு வாக்கில் முஸ்லிம் உலகின் கதவுகளைத் தட்டினர். அதிலிருந்தே முஸ்லிம் வரலாற்றின் இரண்டாம் கட்டம் துவங்கியது. முஸ்லிம்களின் அரசியல் திறன்கள் அப்போது சகல கோணங்களையும் அல்லது வருங்கால விளைவுகளையும் நுணுகியுணரும் திறன்படைத்தவையாக இருக்கவில்லை; அவர்களின் இராணுவங்கள் ஒழுங்கு குலைந்து பிளவுபட்டுக் கிடந்ததுடன், அதிக விலைதரும் எவருக்கும் தமது விசுவாசத்தை தாரைவார்க்கவும் தயாராக இருந்தன.